சாத்தூர் பட்டாசு குடோனி்ல் வெடி விபத்து: 2 போலீஸார் படுகாயம்
சாத்தூர்: சாத்தூரில் பட்டாசு குடோனில் போலீசாரும் வருவாய்த்துறையினரும் ரெய்ட் நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உடல் கருகி பலத்த காயமடைந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக, இரவு-பகலாக நடந்து வருகிறது.
பல இடங்களில் லைசென்சு பெறாமல் குடோன்கள், வீடுகளிலேயே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து புகார்கள் குவிந்து வருவதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சாத்தூர், வெம்பக்கோட்டை, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களில் சோதனை நடந்தது.
துரைசாமிபுரத்தில் உள்ள ராமசுப்பு என்பவருக்கு சொந்தமான குடோனில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் ரெய்ட் நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப், சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸார் கணேசன், ஆசைக்கனி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜமோகன், சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அப்துல் லத்தீப், ரமேஷ் ஆகியோர் உடல் கருகிவிட்டது. இருவரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications