ஈழத் தமிழர்களை ஆஸி.க்கு அனுப்பி வந்த விடுதலைப் புலி போராளி கைது

கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழர்களை படகு மூலம் அனுப்பி வைக்க இருந்த போது அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் பிடிபட்டனர். இவ்வழக்கில் சிவக்குமார் என்ற சிவாவை கொல்லம் போலீசார் தேடி வந்தனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை ஆட்களை அனுப்பி வைத்த வழக்கிலும் இவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கொல்லத்தில் இவர் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது முக்கிய பகுதி ஓன்றில் சிவக்குமார் பிடிப்பட்டார்.
பிடிபட்ட அவரிடம் கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் 1980 முதல் விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றியதும் பின்னர் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்ததும், தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தொடர்ந்து இவர் தமிழகத்தில் இருந்து கேரளாவில் பதுங்கியிருந்து இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து அகதிகளை ஆஸ்திரேலியா நாட்டுக்கு படகுகள் மூலம் அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது.
மேலும் கேரளாவில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மத்திய, மாநில போலீசார் சிவக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறிதது கொல்லம் மாவட்ட எஸ்பி ஹர்சிதா நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி வந்த இவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
கேரள ஓட்டலில் வெடிபொருள் சிக்கியது
இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வெடிபொருள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டயம் மாவட்டம் ஈராற்றுபேட்டையில் பார் வசதியுடன் கூடிய ஓட்டல் உள்ளது. இதன் வரவேற்பு அறையில் பிளாஸ்டிக் பைக் கேட்பாரற்று கிடந்தது. இதை ஓட்டல் ஊழியர் ஒருவர் எடுத்து பார்த்தார். அதில் சக்தி வாய்ந்த 2 ஜெலட்டின் குச்சிகள், 27 டெட்டனேட்டர்கள் இருந்தது.
இதுகுறித்து ஈராற்றுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷெரியான் தலைமையில் போலீசார் விரைந்து வந்து வெடிபொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தினர்.
பிளாஸ்டிக் பையில் சில பேப்பர் இருந்தது. இதை வைத்து நடந்த விசாரணையில் ஈராற்றுபேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களின் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவன். மற்றொருவர் ஈராற்றுபேட்டையை சேர்ந்தவர்.
இருவரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 13ம் தேதி ஈராற்றுபேட்டை அருகே உள்ள பரனங்கானம் பகுதியில் புதிய அல்போன்சா நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க ஜனாதிபதி பிரதிபா பாட்டில் வருகிறார். இந்த சமயத்தில் ஓட்டலில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஈராற்றுபேட்டை மற்றும் ஜனாதிபதி பங்கேற்கும் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications