சத்தம் போடாமல் கட்டணத்தை உயர்த்திய மினி பஸ்கள்-மக்கள் வேதனை
சென்னை: டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி தமிழகத்தில் ஓடி வரும் மினி பஸ்களில் கட்டணத்தை சத்தம் போடாமல் உயர்த்தி விட்டனர். இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினைகள் வெடித்து வருகின்றன.
50 பைசா முதல் 1 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் மினி பஸ் முதலாளிகள்.
டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். அதேசமயம், தற்போது தமிழகத்தில் ஓடும் அரசு பஸ்களில் சாதாரணக் கட்டண பஸ்களை விட பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்புப் பேருந்துகளே பெருமளவில் ஓடுகிறது என்பது வேறு விஷயம்.
இந்தநிலையில் தனியார் மினி பஸ்களில் சத்தம் காட்டாமல் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அதாவது எப்படி என்றால், மக்கள் மினி பஸ்களையே அதிகம் நம்பியுள்ள பகுதிகளில் இதை தீவிரமாக அமலாக்கி வருகின்றனர். சில்லறை இல்லை என்று முதலில் கூறி விட்டு இப்போது நிரந்தரமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
மினி பஸ்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் அதிகம் இயக்கப்படுகின்றன. இதை நம்பித்தான் பல கிராமங்கள் உள்ளன. எனவே வேறு வழியில்லாமல் இந்தக் கட்டண உயர்வை அவர்கள் ஏற்க நேரிட்டுள்ளது. அதேசமயம், விவசாயிகளுக்குத்தான் இந்த கட்டண உயர்வால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விவசாயத் தொழில் சரியில்லை. மழை இல்லை, மின்சாரம் முறையாக இல்லை. இந்த நிலையில், கிராமங்களிலிருந்து காய்கறி உள்ளிட்டவற்றை நகரங்களுக்குக் கொண்டு செல்ல அவர்கள் மினி பஸ்களையே நம்பியுள்ளதால், கட்டண உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
மினி பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு பல்வேறு புகார்கள் போயுள்ளனவாம். இருந்தாலும் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அங்கிருந்து உரியவர்களுக்கு அறிவுறுத்தல் போயுள்ளதாம்.