கோவில்பட்டி: லாரியுடன் மோதல்-கார் எரிந்து 8 பேர் உடல் கருகி பலி
தூத்துக்குடியில் இருந்து ஒரு லாரி ஜிப்சம் ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை சென்றது. லாரியை நெய்வேலியை சேர்ந்தகுமார் ஓட்டிச் சென்றார்.
கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது லாரியின் பின் பக்க டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து லாரியை டிரைவர் ரோட்டோரமாக நிறுத்தினார்.
அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது.லாரியின் டீசல் டேங்க் மீது கார் மோதியதால், அது வெடித்துச் சிதறி காரும் லாரியும் தீப்பற்றி எரிந்தன.
இதில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 8 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். லாரியின் டிரைவரும், கிளீனரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் காரும் லாரியும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டன.
காரில் இருந்த 8 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்டனர். உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலுமாக உருக்குலைந்துவிட்டன.
இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.













Click it and Unblock the Notifications