லோக்சபாவில் செயல்படுவது எப்படி?அழகிரி தலைமையில் திமுக ஆலோசனை!

மு.க.அழகிரி தலைமையில் திமுக எம்.பிக்கள் டெல்லியில் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கூட்டம் அழகிரி வீட்டில் வைத்து நடந்துள்ளது. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக தற்போது டி.ஆர்.பாலு செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழகிரி வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா திமுக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன், நெப்போலியன் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் உள்ள திமுக உறுப்பினர்கள் கேள்வி நேரம் மட்டுமின்றி, பிற சமயங்களிலும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், பிற கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளில் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், திமுக கொள்கைகளுக்கு உட்பட்டும் பங்கேற்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததும், டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறபோது, திமுகவைச் சேர்ந்த இரு அவை உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி கேள்வி எழுப்புவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேள்வி நேரத்தின் போது தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை எவ்வாறு பெற வேண்டி பேச வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications