அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீஸ் தீவிர விசாரணை
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மாசானமுத்து பள்ளி கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் ஒரு பெண் பேசினார்.
அந்த பெண் பள்ளி கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி கூடத்துக்கு போக வேண்டாம் என கூறிவிட்டு அழைப்பை தூண்டித்து வி்ட்டார்.
உடனே ஆசிரியர் மாசானமுத்து அந்த பெண் பேசிய போன் நம்பருக்கு திருப்ப அழைத்து பேசினார். அப்போது எதிர்முனையில் ஒரு ஆண் பேசினார். அவர் இது தக்கலையில் உள்ள எஸ்டிடி பூத் என்றும் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்த பெண் யார் என்று தெரியாது என்றும் கூறி உள்ளார்.
உடனே ஆசிரியர் மாசானமுத்து பள்ளிகூட தலைமை ஆசிரியருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு பள்ளி கூட மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி பள்ளி கூட மைதானத்தில் உட்கார வைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி கூடத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.
நாகர்கோவில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் பள்ளி கூடம் சென்று விசாரணை நடத்தினார். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.