பேராவூரணி அருகே தட்டி வைப்பதில் தகராறு-திமுக,அதிமுகவினர் மோதல்
தஞ்சாவூர்: விளம்பர தட்டி வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக- அதிமுகவினர் மோதிக் கொண்டனர்.
ஆகஸ்ட் 14 ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அதிமுக டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்,பேராவூரணி சேது ரோடு அருகே அவரை வரவேற்று விளம்பர தட்டியை மணிமுத்து என்பவர் வைத்துள்ளார்.
இதை திமுகவைச் சேர்ந்த சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விளம்பர தட்டியை திமுகவினர் அகற்றினர்.
இதனால் ஆவேசம் அடைந்த அதிமுக -வினர், அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த திமுக -வினரின் விளம்பர தட்டிகளை அடித்து உடைத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்திய பேலீசார் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.