கரூர் யூனியன் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி உண்ணாவிரதம்
கரூர்: கரூர் யூனியன் தலைவர் வளர்மதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, துணைத் தலைவர் உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூர் யூனியன் தலைவர் வளர்மதி மீது திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைவர் வளர்மதி மீது கவுன்சிலர்கள் கொடுத்த புகார் மீது விசாரணையின் உண்மைத் தன்மை குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், கடந்த தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள், தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தால், அது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான காலக்கெடு குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும் என்றும், யூனியன் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக, அலுவலக வளாகம் எதிரே இன்று மூன்றாவது முறையாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் ஊழல் தலைவர் வளர்மதியை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.