பிஇ: இந்தாண்டு சிவில்-மெக்கானிக்கல் பிரிவுக்கும் அதிக வரவேற்பு

வழக்கம் போல பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பாடப் பிரிவிற்கு அதிக வரவேற்பு இருந்தாலும் மெக்கானிக்கல், சிவில் பாடப் பிரிகளிலும் இந்தாண்டு அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு 3 கட்டமாக நடத்தப்பட்ட கவுன்சிலிங் மூலம் மொத்தமுள்ள 1,15,482 இடங்களில் 1,04,717 இடங்கள் நிரம்பிவிட்டன. 10,765 இடங்களே காலியாக உள்ளன.
கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்ட 49,423 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடு்த்து துணை கவுன்சிலிங் நாளையும், 16ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். சிவில் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் இந்தாண்டு மொத்தமிருந்த 8,996 இடங்களில் 8,911 இடங்கள் நிரம்பிவிட்டன. அதாவது 98 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன.
மெக்கானிக்கல் பாடப் பிரிவில் மொத்தமுள்ள 16,494 இடங்களில் 16,181 இடங்கள் நிரம்பிவிட்டன. இதுவும் சுமார் 98 சதவீதமாகும்.
மேலும் இந்தாண்டு சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன் முதலாக தமிழில் என்ஜினீயரிங் படிக்க விரும்பி ஏராளமான மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
தமிழ் சிவில் பாடப் பிரிவில் மொசத்தமுள்ள 660 இடங்களில் 656 இடங்கள் நிரம்பிவிட்டன. தமிழ் மெக்கானிக்கல் பிரிவி்ல் மொத்தமுள்ள 720 இடங்களில் 711 இடங்கள் நிரம்பிவிட்டன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் மொத்தமுள்ள 22,513 இடங்களில் 19,127 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் 25,221 இடங்களில் 23,244 இடங்களும் நிரம்பிவிட்டன.
தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் மொத்தமுள்ள 14,791 சீட்டுகளில் 11,508 இடங்கள் நிரம்பிவிட்டன. இது 78 சதவீதமாகும். கடந்த ஆண்டு 44 சதவீதம் இடங்களே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவில் மொத்தமுள்ள 16,906 இடங்களில் 15,182 இடங்கள் நிரம்பிவிட்டன.












Click it and Unblock the Notifications