சுதந்திர தினம்: தமிழக கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு
சென்னை: நாட்டின் 64வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 70,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏதுமில்லை என்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.லத்திகா சரண் கூறியுள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்படும்.
லாட்ஜுகள், ஹோட்டல்கள், விடுதிகளில் தங்கியிருப்போரின் விவரங்களை அப் பகுதி காவல் நிலையங்கள் சேகரித்து வருகின்றன.
அதே போல வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் நாளை இரவு முதல் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று கோட்டை பகுதியில் சுதந்திர தின ஒத்திகை மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அதை நேரில் பார்வையிட்டார் டிஜிபி லத்திகா சரண்.
15ம் தேதி காலை 8.30 மணிக்கு கோட்டையில் முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.
பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.