காங்கிரஸுக்கு எல்லாவற்றையும் இறக்குமதி செய்யவே பிடிக்கிறது-உத்தவ் நக்கல்

மகாராஷ்டிர மாநில விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுவர் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியிருந்தார். இதைத்தான் இப்படி நக்கலடித்துள்ளார் உத்தவ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு எல்லாமே இறக்குமதிதான். தலைவரைக் கூட அப்படித்தான் விரும்புகிறது அந்தக் கட்சி. இப்போது வெளிநாட்டு பயிற்சியாளர்களை அமர்த்தப் போவதாக அந்தக் கட்சியின் அசோக் சவான் கூறியுள்ளார்.
ஏற்கனவே நமது நாடு பால், கோதுமை உள்ளிட்டவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. இதனால் உள்ளூர் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதைப் பற்றி காங்கிரஸ் எங்கே கவலைப்படுகிறது. எல்லாவற்றையும் இறக்குமதி செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். அக்கட்சியின் தலைவர் கூட இறக்குமதி செய்யப்பட்டவராகவே உள்ளார்.
மும்பையில் மலேரியா காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த இந்த அரசுக்கு துப்பில்லாமல் போய் விட்டது என்றார் உத்தவ்.
மும்பையில் மலேரியா, டெங்கு போன்றவை பரவ வெளிமாநிலத்தவர்கள்தான் காரணம் என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் ராஜ் தாக்கரே சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications