ரவுடியின் மாமூல் அட்டகாசம்-சென்னையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம்
சென்னை : சென்னை புளியந்தோப்பு பகுதியில் அப்பு என்ற ரவுடியின் அட்டகாசத்திற்கு காவல்துறையினர் முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவன் அப்பு (25). அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வருகிறான். இவன் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அடி தடி சம்பவங்களிலும் இவன் ஈடுபட்டு வந்தான். அப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கடைகளில் மாமூல் வசூலிப்பதை இவன் வழக்கமாக கொண்டிருக்கிறான்.
கத்தியை காட்டி மிரட்டி கடைகளில் மாமூலும் விசாரித்து வருகிறான். கடைக்கு 500 ரூபாய் வரை வசூலித்து வருகிறான். இதுகுறித்து போலீஸாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் அப்பு மீது எந்த நடவடிக்கையும் இல்லையாம். சுதந்திரமாக அவன் ரவுடித்தனம் செய்து வருகிறான்.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று கன்னிகாபுரம் அம்பேத்கார் கல்லூரி சாலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ரவுடி அப்புவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் மனோகரன், ராஜபாண்டி, அமுல் ஸ்டாலின், ஆனந்த் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். ரவுடி அப்புவை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications