தீவிரவாதம், நக்சலிசத்தை ஒடுக்க தில் இல்லாத மத்திய அரசு-நரேந்திர மோடி தாக்கு

ராஜ்கோட் மாநகராட்சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார் மோடி.
அவர் கூறுகையில், தீவிரவாதத்தையும், நக்சலிசத்தையும் ஒடுக்க மத்திய அரசிடம் திராணி இல்லை, தைரியம் இல்லை. இதனால்தான் இவை இரண்டும் இன்று நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த அரசால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. அதற்கான தகுதி இந்த அரசிடம் இல்லை.
தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதை இந்தியா செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா செய்கிறது. இதனால்தான் செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவைத் தாக்க தீவிரவாதிகள் அஞ்சுகின்றனர்.
ஆனால் தீவிரவாதமும், நக்சலிசமும் தீவிரமான பிரச்சினைகள் என்று கூறுவதோடு நின்று கொள்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இது துரதிர்ஷ்டவசமானது.
இந்தியாவில் தீவிரவாத தடுப்புக்கு கடுமையான சட்டங்கள் இல்லை என்று ஐ.நா.வே கூறியுள்ளது. தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளையும், சட்டத்தையும் அரசு கொண்டு வந்தால் அதற்கு நானும், பாஜகவும் துணையாக இருப்போம் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications