பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் வீச்சு-பரபரப்பு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் பைக்கில் வந்த இருவர் கஞ்சா பொட்டலம், செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றை 5 பாலீதின் கவர்களில் அடைத்து வீசிச் சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1400 பேர் உள்ளனர். இங்கு சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 300 சிறை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைக்குள் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று பைக்கில் வந்த இருவர் சாலையோரம் நின்றவாறே திடீரென 5 பாலீதின் பைகளை வெளிச்சிறைக்குள் வீசினர். இதை பார்த்த சிறைக் காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். உடனே காவலர்கள் வெளிசிறைக்குள் சென்று பாலீதின் பைகள் விழுந்த பகுதியைப் பார்த்தனர். ஆனால் அதற்குள் அவற்றை யாரோ பதுக்கி விட்டனர். இது தொடர்பாக இரு கைதிகளை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இதில் 1 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை சிறை கம்பவுண்டுக்குள் விழுந்ததாகவும், அதை கும்பலாக வந்த 10 கைதிகள் எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதி்ர்ச்சி அடைந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் கஞ்சா மற்றும் செல்போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவத்தால் நேற்று சிறை வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications