பொய் வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர்-எஸ்.ஐ.க்கு 3 நாள் போலீஸ் காவல்
கோவில்பட்டி: பொய் வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை 3 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோவில்பட்டி கோர்ட் உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுமோகன். இவர் தனது நண்பர்களுடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி காரில் சென்றுள்ளார்.
அப்போது இவரை தென்காசி சோதனைச் சாவடியில் ராமநாதபுரம் போதை பொருள் தடு்ப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, எஸ்.ஐ. ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகியோர் பிடித்து ரூ.3 லட்சம் மாமூல் தருமாறு கேட்டனர். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் இவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அனுமோகன் முறையீட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அனுமோகன் மீது பொய் வழக்கு போட்டது நிரூபணமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகிய இருவரும் கடந்த 6-ம் தேதி இரவு தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான எஸ்.ஐ. ராஜமணிக்கம் தேனி நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி சரணடைந்தார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கோவில்பட்டி ஜே.எம். 1 கோர்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
இதை ஏற்று 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்ஸ்பெக்டர் காந்தி உள்ளிட்ட மூவரையும் விசாரணைக்காக நேற்று தூத்துக்குடி அழைத்து வந்தனர்.












Click it and Unblock the Notifications