லே வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 125 கோடி ஒதுக்கீடு-பிரதமர்
லே: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட லே பகுதியில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார். நிவாரணப் பணிகளுக்கு ரூ. 125 கோடியையும் அவர் ஒதுக்கி உத்தரவிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதி சமீபத்தி்ல் கடும் வெள்ளத்தில் சிக்கி சீர்குலைந்து போனது. இந்தப் பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேரில் பார்வையிட்டார். மறு சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் வேகம் குறித்து ஆராய்ந்தார்.
பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸும் உடன் இருந்தார்.
பின்னர் பிரதமர் கூறுகையில், லே பகுதியில் சிதிலமடைந்த வீடுகள் அனைத்தும் இன்னும் இரண்டரை மாதங்களில் கட்டிக் கொடுக்கப்படும். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு என்பது பிரச்சினையாக இருக்காது.
லே பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கப்படும். பிரதமரின் இயற்கை சீற்ற நிவாரண நிதியிலிருந்து இது ஒதுக்கப்படும்.
மருத்துவமனை, பள்ளிக்கூடம், மின் இணைப்புகள், சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும், தேவைப்படும் இடங்களில் அவை புதிதாக கட்டித் தரப்படும். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு இவை முடிக்கப்படும்.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி பலருடைய உயிர்கள் பறிபோயுள்ளன. இது மீண்டும் பெற முடியாதஇழப்பாகும். இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணத்தை செய்ய மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் கவனிக்கப்படும்.
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை நான் இங்கு வந்து வீடுகள் கட்டித் தரப்படுவதை நேரில் பார்வையிடுவேன் என்றார்.
பின்னர் முதல்வர் உமர் அப்துல்லாவைவையும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.
நேற்று ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, ராணுவத் தளபதி வி.கே.சிங் ஆகியோர் லே பகுதிக்கு விஜயம் செய்து, மருத்துவமனைகள், நிவாரண முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications