ஒரே வாரத்தில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 84 பேர் பலி
சென்னை: கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் முதன்முறையாகப் பரவியது. இதில் உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரத்து 286 பேர் பலியானார்கள். இந்தியாவில் மட்டும் 1501 பேர் பலியானார்கள். தமிழகத்திலும் இக்காய்ச்சலால் பலர் உயிர் இழந்தனர்.
அதன் பிறகு பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தற்போது மறுபடியும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 84 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது. மே மாதத்தில் இருந்து தற்போது வரை 1945 பேர் பலியாகி உள்ளனர். 37 ஆயிரத்து 385 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பருவமழை தீவிரமாக உள்ளதால் காய்ச்சல் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் தவிர புதிதாக 1155 பேருக்கு பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது.
நாட்டிலேயே அதிகமாக மஹாராஸ்டிராவில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதை தொட்ரந்து டெல்லி, கர்நாடக மாநிலங்களில் தலா 7 பேரும், ஆந்திராவிலும், குஜராத்திலும் தலா 5 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், கேரளாவில் 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலால் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். கோவையிலும் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளது.
இப்போது சென்னையிலும் பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் மட்டும் தினமும் சுமார் 20 முதல் 40 பேருடைய ரத்த மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்கப்படுகிறது. இதில் 8 பேருக்காவது பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2-வது தடவை பரவும் பன்றிக் காய்ச்சல் ஆபத்தானது. எனவே, மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது என்று கிங் இன்ஸ்டி யூட் துணை இயக்குனர் குணசேகரன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,
கடந்த தடவை பரவிய பன்றிக் காய்ச்சல் வைரசை விட இப்போது 2-வது தடவையாக பரவும் வைரசுக்கு இயற்கையாகவே வீரியம் அதிகமாகி விடும். எனவே, இதன் பாதிப்பும் அதிகமாக இருக்கும். இதை கட்டுப்படுத்துவதும் சுலபமல்ல் என்று அவர் கூறினார்.
இது பற்றி பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது,
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை பன்றிக் காய்ச்சல் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை தாக்குவது எளிது. ஆகையால், அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்கினாலும் கூட அது சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று நினைத்து பலர் உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது இல்லை. எனவே சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது நல்லது என்று அவர் கூறினார்.
பன்றிக் காய்ச்சலுக்கு இப்போது தடுப்பு மருந்துகள் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு 50 ஆயிரம் “டோஸ்" மருந்துகள் வழங்கி உள்ளது. அவை பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவை மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2 வகை தடுப்பு மருந்துகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.