ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு போட்ட பொதுமக்கள்
ஓட்டபிடாரம்: ஓட்டபிடாரம் அருகே ஆசிரியையின் அடாவடியால் பொதுமக்கள் பள்ளியை இழுத்துப் பூட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ளது எம்.வெங்கடேஸ்வரபுரம். இங்கு யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் துணை தலைமை ஆசிரியை என இருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி தற்போது பிரச்சனையி்ல் சிக்கி உள்ளது.
இங்கு பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த துணை தலைமை ஆசிரியை சத்துணவு ஊழியர், சமையலர் உள்ளிட்ட சக ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவாராம். அதனால் கல்வி தரம் அடியோடு பாதிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை பொதுமக்கள் அந்த பள்ளியை இழுத்துப் பூட்டினர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
புகாரில் சிக்கிய அந்த துணை தலைமை ஆசிரியை வயதில் முதிர்ந்தவராம். இதுவரை தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர்கள் அவரை விட வயது குறைந்தவர்களாம். இதனால் ஈகோ பிரச்சனை காரணமாக அவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்துவாராம்.
அவரது தொல்லை தாங்காமல் இதுவரை 4 ஆசிரியர்கள் இடமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது துணை தலைமை ஆசிரியையை அங்கிருந்து வெளியேற்றுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications