நர்சிங் கல்லூரி தாளாளரின் செக்ஸ் வக்கிரகம்-மாணவி குமுறல் புகார்
வேலூர்: திருப்பதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி தாளாளர் தன்னை படுக்கைக்கு வருமாறு கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக அந்தக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஷாஹினா என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி ஷாஹினா கொடுத்துள்ள புகாரில்,
எனது சொந்த ஊர் குடியாத்தம் அடுத்த கார்னாம்பட்டு நான் திருப்பதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். 2007-ம் ஆண்டு நான் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த தேதியிலிருந்து இந்த ஆண்டு வரை அந்த காலேஜில் நான் மட்டும் தான் முஸ்லிம் பெண்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்லூரியை நடத்தி வரும் தாளாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் எனது தந்தையிடம் சொல்லி விடுவேன் என்று கூறி மிரட்டினேன். ஆனால் 15 நாட்களுக்கு முன் இன்று இரவு நீ எனக்கு அடிபணிய வேண்டும் இல்லை என்றால் மயக்க மருந்து கொடுத்து அனுபவித்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதையடுத்து நான் எனது உடமைகளை எடுக்குக் கூட நேரம் இல்லாமல் ஹாஸ்டலை விட்டு வெளியேறி விட்டேன். வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் எனக்கு தேர்வு இருக்கிறது. நீ என்னை மீறி தேர்வு எழுதினால் கூட எப்படி பாஸ் ஆகிறாய் என்று நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டுள்ளார் தாளாளர். எனது ஹால் டிக்கெட் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் ஷாஹினா.
சமீபத்தில்தான் ஆந்திராவில் ஒரு பள்ளித் தாளாளர் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்து சிக்கினார். இந்த நிலையில் நர்சிங் கல்லூரி மாணவி, தாளாளர் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.