மதுரையில் ஜெயலலிதா கூட்டம்-தயாராகும் அதிமுகவினர்

சில நாட்களுக்கு முன்பு கோவை மற்றும் திருச்சியில் அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரையில் அதிமுக பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தை, அக் கட்சி தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் தடையில்லா சான்றிதழ்களுடன், அ.தி.மு.க.நகர செயலாளர் செல்லூர் ராஜூ விண்ணப்பித்தார். ஆனால், சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த உள்ளதாகக் கூறி, மைதானத்தை தர மாநகராட்சி மறுத்து விட்டது.
இதனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமுக்கம் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து பொது கூட்டம் நடத்த நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
வருகிற செப்டம்பர் 18 ம் தேதி முதல் செப்டம்பர் 21 ம் தேதி வரை, மைதானத்தை அ.தி.மு.க.வினர் புக் செய்துள்ளனர். இதற்கான வாடகை தொகை 63 ஆயிரத்து 371 ரூபாயை அக்கட்சி செலுத்தி விட்டது.
அதேசமயம், மைதானத்தைப் பயன்படுத்த 19 நிபந்தனைகளை மாநகராட்சி விதித்துள்ளது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து பிரமாண்டமான அளவில் கூட்டத்தை நடத்தவும், அதற்கு ஜெயலலிதாவை வரவழைக்கவும் அதிமுகவினர் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இருப்பினும் கோவை, திருச்சியில் கூட்டிய கூட்டத்தைப் போல தமுக்கம் மைதானத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்பதால் வேறு இடத்தில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் அதிமுக தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications