சோராபுதீன் கொலையில் மோடி தொடர்புக்கான ஆதாரம் இல்லை-சிபிஐ அறிவிப்பு
டெல்லி: சோராபுதீன் கொலை வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் அவரது தொடர்புகள் குறித்து விசாரி்ப்பதில்லை என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரத்தில் கூறுகையில், சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே மோடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தாது.
இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கு சாதகமாக மோடி நடந்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மோடி பிறப்பித்த உத்தரவை வைத்து அவருக்கு இந்த கொலைகளில் தொடர்பு இருப்பதாக கூற முடியாது. இதை ஆதாரமாக கருதவும் முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
சோராபுதீன் கொலை வழக்கில் மோடியின் நெருங்கிய அமைச்சரும், உள்துறை அமைச்சராக இருந்தவருமான அமீத் ஷா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதை மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். பாஜகவுக்கு எதிராக சிபிஐயை பயன்படுத்தி வருகிறது காங்கிரஸ் அரசு என்றஉம் கடுமையாக சாடியிருந்தார். அடுத்த தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்குப் பதில், சிபிஐ அதிகாரிகளையே வேட்பாளராக நிறுத்தினாலும் நிறுத்தும் காங்கிரஸ் என்றும் கிண்டலடித்திருந்தார்.
கடந்த 2005ம் ஆண்டு போலியான என்கவுன்டர் மூலம் சோராபுதீன் ஷேக்கும், அவரது மனைவியும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.