ரேஷன் கார்டு கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கார்டு வழங்கக் கோரி பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் புதிய ரேசன் கார்டு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.
திருப்பூரில் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளதால், அவர்கள் இடம் பெயதல், மக்கள் தொகை, அடிக்கடி முகவரி மாறும் மக்கள், போதிய சான்று இல்லாதது, குடிமைப்பொருள் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால், புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தொடர் பிரச்னை ஏற்பட்டு வருகின்றது.
இப் பிரச்னை கருத்தில் கொண்டு, விண்ணப்பித்த 60 நாட் களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்திலேயே ரேஷன் கார்டு அச்சிடும் மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திருப்பூர் குடிமைப்பொருள் அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி குவிந்தனர். அவர்கள் அதிகம் பேர் திரண்டதால், மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பொது மக்கள் ஆவேசம் அடைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் டி.ஆர்.ஓ.கஜலட்சுமி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.