ஒரே பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியைகள்-பனிப்போரால் வேலூரில் பரபரப்பு
வேலூர்: வேலூர் ஈவேரா நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு தலைமை ஆசிரியைகள் பணி்யில் இருப்பதாலும், அவர்களுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளதாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்து வந்த தலைமை ஆசிரியை விஜயக்குமாரி கோர்ட்டில் ஸ்டே வாங்கி வந்து பள்ளியில் அமர்ந்திருக்கிறார். இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியை தலைமை ஆசிரியருக்கான அறைக்குள் போக முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
தலைமை ஆசிரியை விஜயக்குமாரி விடுமுறையில் போயிருந்தார். அந்த சமயத்தில் புதிதாக காயத்ரி தேவி தலைமை ஆசிரியையாக நியமிக்கப்ப்டார். விஜயக்குமாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து விஜயக்குமாரி கோர்ட்டில் ஸ்டே வாங்கி விட்டார்.
நேற்று முன்தினம் 2 தலைமை ஆசிரியைகளும் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து விரைந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை ஆசிரியர் அறையை பூட்டு போட்டு பூட்டிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்றும் அறை திறக்கப்படவில்லை. ஆனால் 2 தலைமை ஆசிரியைகளும் பள்ளிக்கு வந்தனர். காயத்ரி தேவி பள்ளியில் உள்ள மற்றொரு அறையில் இருந்து பணிகளில் ஈடுபட்டார்.
தலைமை ஆசிரியை விஜயகுமாரி பூட்டுபோட்ட அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பள்ளி முடிந்ததும் இருவரும் வீடு திரும்பினர். இன்று காலை வழக்கம் போல் 2 பேரும் பள்ளிக்கு வந்தனர். காயத்ரிதேவி அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார். விஜயகுமாரி பூட்டி அறை முன்பு அமர்ந்து 3-வது நாளாக போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈ.வே.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் அங்கு பணிபுரிந்த தலைமை ஆசிரியை விஜயக்குமாரி அனைத்து விவரங்கள் அடங்கிய அட்டவணை ஒன்றை அமைத்துள்ளார். அதில் அரசு உதவி பெறும் மாணவிகள், தனிதனி பாட வாரியாக ஆசிரியர்கள் எண்ணிக்கை, தினசரி வருகை, மொத்த மாணவிகள் விவரம் அடங்கிய அட்டவணையுடன் தலைமை ஆசிரியர் அறை காட்சியளிக்கிறது.
மேலும் தலைமை ஆசிரியர் விஜயக்குமாரி முயற்சியால் பள்ளி முகப்பில் பெரியார், நாகம்மை உருவபடம் வரையப்பட்டுள்ளது. மற்றும் தண்ணீர் வசதிக்காக கூடுதல் போர்வெல் அமைக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தைத் தீர்க்க கல்வித்துறை தரப்பில் சுறுசுறுப்பான, விரைவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதால் பள்ளியில் தொடர்ந்து பரபரப்பு காணப்படுகிறது.