மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செருப்பை காட்டிய அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செருப்பை தூக்கி காட்டிய அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் கூட்டம் இன்று காரசாரமான வாக்குவாதத்துடன் நடந்து கொண்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கவுன்சிலருமான சாலைமுத்து பேசுகையில்,
திமுக ஆட்சியில் பத்திரிகைகாரர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்களை அச்சுறுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அப்போது பேசிய திமுக கவுன்சிலர் அருள்குமார், அதிமுக ஆட்சியில் எத்தனை பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று எங்களால் பட்டியல் கொடுக்க முடியும் என்றார்.
இந் நிலையில் சாலைமுத்து செருப்பைக் காட்டி ஆவேசமாக பேசினார். இதையடுத்து திமுக கவுன்சிலர் அருள்குமார் மைக்கை தூக்கி வீசினார். இதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செருப்பை தூக்கி காட்டிய சாலைமுத்துவை சஸ்பெண்ட் செய்வதாக, மேயர் தேன்மொழி அறிவித்தார்.