கபடி விளையாட்டில் தகராறு-கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை அருகே கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகேயுள்ள தாழையுத்து செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்ற மணி. இவரது மகன் இசக்கி செல்வம். கபடி வீரரான இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 15ம் தேதி இசக்கி செல்வம் தலைமையிலான ஒரு குழுவினரும், தாழையூத்து ராம்நகரை சேர்ந்த அர்ஜீனன் மகன் கிட்டான் தலைமையிலான மற்றொரு குழுவினரும் அருகன்குளம் பள்ளி வாளகத்தில் கபடி விளையாடினர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் கிட்டன் கோஷ்டியினர் இசக்கி செல்வத்தை தீர்த்து கட்ட திட்டமி்ட்டனர். இந்நிலையில் நேற்றிரவு இசக்கி செல்வம் தனது நண்பர் ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் பரமன் ஆகியோருடன் தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 14 பேர் கொண்ட கும்பல் இசக்கி செல்வத்தை சராமரியாக அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற ராமகிருஷ்ணன், பரமன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இசக்கி செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அந்த வழியாக வந்த தாழையூத்து ராம்நகர் லெட்சுமி, அவரது மகன் மகாராஜன் ஆகியோரை இசக்கி செல்வத்தின் ஆதரவாளர்கள் என நினைத்து வெட்டினர்.
தகவல் அறிந்ததும் டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
காயமடைந்த பரமன், ராமகிருஷ்ணன், லெட்சுமி ஆகியோர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து கிட்டன், பேச்சிகுட்டி, தங்கம், ஆர்தர், சி்ட்டிசன உள்பட 7 பேரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.