துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலைக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை: துறைமுகம்-மதுரவாயல் இடையே உயர்மட்ட மேம்பால விரைவு சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்க்கும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரவாயலைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசின் சார்பில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு, கூவம் நதியையொட்டி முழு உயர்மட்ட விரைவு சாலையை அமைக்க திட்டமிடப்பட்டு 22.6.07-ல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஏற்கெனவே இருந்த திட்டத்தை மாற்றி உயர்மட்ட சாலையின் ஒரு பகுதி சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் நதியையொட்டியும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டியும் அமைக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக கடந்த 7.3.08-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடக்கத்தில் இந்தத் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.1,469 கோடியாக இருந்தது. திட்டத்தை மாற்றியதால், நிலங்களைக் கையகப்படுத்துதல் உள்ளிட்டச் செலவுகளுக்காக அரசுக்கு ரூ.345 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்மட்ட சாலையின் பாதைகள் நிர்ணயிப்பு தொடர்பான கேள்வியில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
சாலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்-ஜெ:
இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் சந்திப்பை இணைக்கும் வகையில் 19 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைப்பதற்காக குடிசைப் பகுதிகளை திமுக அரசு அகற்றிக் கொண்டிருக்கிறது. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, இப்பகுதியில் வசிக்கும் வீடுகளை காவல் துறையின் உதவியுடன் இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை வேறு இடத்திற்கு விரட்டி அனுப்பிவிட்டது தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்.
ஓன்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு திட்டமிடப்பட்ட இந்தச் சாலை எப்படி 19 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையாக மாற்றப்பட்டது என்ற எனது கேள்விக்கு திமுக அரசு இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை.
சென்னையில் உள்ள 2000 குடிசைப் பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில், மேற்படி குடிசைப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடிசை வாழ் மக்கள் அகற்றப்பட்டு, கேவலமான பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
கூவத்தை மணக்க வைப்பதாக கூறிக் கொண்டு, கரையோரங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு வந்து விட்டார்கள். கடல்மீன் தொழில் (ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை) வரைவுச் சட்டம் வேறு அவர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், ஓரளவு மீன் பிடித் தொழிலை செய்து கொண்டிருக்கும் எண்ணூர் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள லட்சக்கணக்கான மீனவ மக்களை கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் என்ற பெயரில் அகற்று வதற்கான முயற்சியில் தற்போது திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
மொத்தத்தில் குடிசை மாற்று வாரியம், குடிசை அகற்றும் வாரியமாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக அரசால் கொடுக்கப்படும் மாற்று இடங்கள் தொலை தூரத்தில் உள்ள தோடு மட்டுமல்லாமல், எந்த வித அடிப்படை வசதியுமின்றி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை கண்டித்து அதிமுக தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் இன்று சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என்றுல் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications