தகவல் ஆணையர் தேர்வு-நேருக்கு நேர் சந்திப்பார்களா கருணாநிதி, ஜெ.?
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையர் தேர்வையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவியில் தற்போது இருந்து வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஆணையரைத் தேர்வு செய்ய வருகிற 23ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
புதிய தலைவரை தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஒரு அமைச்சர் ஆகியோர் கொண்ட குழுதான் கூடி தேர்வு செய்ய வேண்டும். கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், அன்பழகன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் கலந்து கொண்டனர்.
எனவே வருகிற 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியுடன், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெயலலிதாவும் கலந்து கொள்ள வேண்டும். எனவே அவர் கலந்து கொள்வாரா, இரு துருவங்களும் சந்திக்குமா, அந்த அதிசயம் நிகழ்ந்தேறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்டசபை நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எங்குமே சந்தித்துக் கொண்டதில்லை - அரசியல்வாதிகளாக. எனவே வருகிற 23ம் தேதி இருவரும் சந்தித்துக் கொண்டால், அதுதான் அன்றைய தலைப்புச் செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications