திருச்சியில் திமுக கோஷ்டிப் பூசல்-நேரு, சிவா ஆதரவாளர்கள் அடிதடி-மண்டை உடைப்பு
திருச்சி: காங்கிரஸ் கட்சியினர் ரேஞ்சுக்கு திமுகவும் மாறி வருகிறது. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பெரிய அடிதடி நடந்துள்ளது. இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் 8ஆம் தேதி திருச்சி செல்கிறார். திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்து வரும் ரூ.169 கோடி மதிப்பிலான, புதிய ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தையும், வெள்ள தடுப்பு பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அன்று மாலை திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகே நிறுவப்படும் அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைக்கிறார். பிறகு அன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
முதல்வர் கருணாநிதி வருகையையொட்டி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் முதல்வரை வரவேற்று பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை சிவா வீட்டுக்குச் செல்லும் வழியான ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலணியிலும் பேனர் வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் உட்பட 30 பேர் கொண்ட அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.
பேனர் வைத்துக்கொண்டிருந்த சிவாவின் ஆதரவளர்களை பார்த்து, இங்கு எப்படி நீங்க பேனர் வைக்கிறீங்க. யார் கொடுத்த தைரியம் இது என்று சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
சிவா ஆதரவாளர்களை நேரு ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில், சிவா ஆதரவாளர் வழக்கறிஞர் பாரதிக்கு மண்டை உடைந்தது. ரத்தம் கொட்டியபடியே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினருக்கிடையே கொலை வெறித் தாக்குதல் மூண்டது. அதேபோல திருச்சியில் நடந்துள்ளதால் திருச்சி அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications