கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் குணமடைந்த காது கேளாத, முகத்தில் உணர்வில்லாதவர்
சென்னை: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மேலும் ஒருவருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு காதின் நடுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு சீழ் வடிந்து பெரும் அவதிக்குள்ளானார்.
இவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. இவரின் காது வலியும் அதிகரித்து மூளைக்காய்ச்சலும் சேர்ந்து கொள்ளவே அவருடைய முகத்தின் ஒரு பகுதி உணர்வின்றி போனது. காது கேட்கும் திறனையும் இழந்தது.
அப்போது தான் இவரின் இன்னல் தீர்க்க வந்தது கலைஞர் காப்பீட்டுத் திட்டம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இவருக்கு நான்காவது முறையாக கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து அவர் காது கேட்கும் தன்மையை பாதியளவிற்கு மீண்டும் பெற்றார். அவர் முகத்தில் உணர்விழந்த பகுதிகளும் குணமடைந்தன.
அந்தோணிசாமியின் அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்று கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரம் வழங்கியது.
இவருக்கு காது முற்றிலுமாக கேட்க முடியாமல் இருந்தது போக தற்போது பாதியளவிற்காவது குணபடுத்தப்பட்டுள்ளது. அவர் மீண்டும் உயிர் பெற்று வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இது வரை 1,75,117 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், மூளை நரம்பு மண்டல பாதிப்புகள், எலும்பு முறிவு போன்ற பல்வேறு விதமான உயிருக்கு ஆபத்தான நோய் களில் இருந்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதற்காக இதுவரை தமிழக அரசு ரூ.468 கோடியே 71 லட்சத்து 36 ஆயிரம் செலவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications