புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா?-ரஷ்யர்கள் வாக்குவாதம்
விகேபுரம்: பாபநாசம் அருகே மது பாட்டில்களுடன் வந்த ரஷ்யர்களை வன ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய ஊழியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு ஆண்-பெண்களும் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் இங்கு பணிபுரியும் ரஷ்ய ஊழியர்கள் ஆண்-பெண் என 6 பேர் ஒரு காரில் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தனர்.
செக்போஸ்டில் அவர்களது காரை சோதனையிட்ட வன காப்பாளர் முருகேசன் 5 மதுபாட்டில்களை கைப்பற்றினார். இதையடுத்து வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்த ரஷ்ய நாட்டினர் மது அருந்துவது கொலை குற்றமா என கேட்டனர்.
அதற்கு, வனக்காப்பாளர் இது புலிகள் காப்பக வனப்பகுதியாகும். மலை ப்பகுதிக்குள் மது பாட்டில்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. நீங்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். திரும்பி வரும்போது அவற்றை வாங்கி செல்லுங்கள் என்றார்.
எனினும் சமாதானம் அடையாத அவர்கள் புலிகளுக்கும், மதுவுக்கும் என்ன சம்பந்தம் என திருப்பி கேட்டனர். பின்னர் ஒரு வழியாக சமாதானம் அடைந்த அவர்கள் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் குளித்து விட்டு திரும்பி வரும்போது செஸ்போஸ்டில் கொடுத்த மதுபாட்டில்களை திரும்பி வாங்கி சென்றனர்.