தமிழகத்தில் உணவுப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பிரமாண்ட உணவுப் பூங்காவினை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உணவுப் பதனிடல் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் லோக்சபாவில் கூறுகையில்,
உணவுப் பூங்கா திட்டத்தில் விளைபொருள்களை பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்து பதன்செய்வது, விளைபொருள்களை கொள்முதல் செய்யும் மையம் அமைப்பது, குளிரூட்டும் மையங்கள் அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்படும்.
2012ம் ஆண்டுடன் முடியும் திட்ட காலத்தில் மொத்தம் 30 பெரிய உணவுப் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 மாநிலங்களில் பெரிய உணவுப் பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ஆந்திரம், அசாம், ஜார்க்கண்ட், தமிழகம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் இவை அமையும்.
இவற்றில் தமிழகம், ஆந்திரம், அசாம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் உணவுப் பூங்கா அமைக்க இறுதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றார்.