இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஸ்பான்ஸர்... ஏலத்தை வென்றது ஏர்டெல்!
இந்த உரிமையைப் பெற ஏர்டெல், ஹீரோ ஹோண்டா, ஏர்செல், ஐடியா, மைக்ரோமாக்ஸ் உள்பட 10 நிறுவனங்கள் போட்டியிட்டன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அடிப்படை கட்டணம் ரூ.2 கோடி என இந்திய கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்திருந்தது.
ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஒரு போட்டிக்கு ரூ.3.33 கோடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கு அடுத்த நிலையில் வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் ரூ.3.15 கோடிக்கு ஏலம் கோரியிருந்தது. எனவே அதிகத் தொகைக்கு கேட்டிருந்த ஏர்டெல்லுக்கே இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளின் 'டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்' வழங்கப்படுவதாக பிசிசிஐ மார்க்கெட்டிங் கமிட்டி அறிவித்துள்ளது.
ஏர்டெல் உடனான இந்த ஒப்பந்தம் வருகிற செப்டம்பர் 1 ந்தேதி முதல் 2013 ம் ஆண்டு மார்ச் வரை நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.3.33 கோடி வீதம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கும். அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய அணி 30 ஒரு நாள் போட்டிகள், 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு சர்வதேச 20 ஓவர் போட்டித் தொடர்கள் என மொத்தம் 53 போட்டிகளில் விளையாட உள்ளது.
இவை அனைத்துக்கும் சேர்த்து ஏர்டெல் நிறுவனம் மொத்தம் சுமார் ரூ.177 கோடியை வழங்க உள்ளது.
ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் நடந்த போட்டிகளுக்கு வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.207 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.