அரியலூர் அருகே சிமென்ட்ஆலை லிப்ட் அறுந்ததில் 4 பேர் பலி
அரியலூர்: அரியலூர் அருகே கீழப்பழுவூர் என்ற இடத்தில் சிமென்ட் ஆலையின் லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் இருந்த 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கீழப்பழுவூர் அருகே ஒரு தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இங்கு சிமெண்ட் தயாரிக்கும் இயந்திரத்தில் நேற்று பழுது ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக வெல்டர் மணிமாறன் (24), ஃபிட்டர் மோகன் (20), சத்தியராஜ் (25), லிப்ட் ஆபரேட்டர் ஜான் (வயது35) ஆகிய 4 பேரும் 4-வது தளத்திற்கு லிப்டில் ஏறி சென்றனர்.
அப்போது லிப்ட்டில் திடீர் என்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 45 அடி உயரத்தில் இருந்து லிப்ட் படுவேகமாக கீழே வந்து விழுந்தது. அதில் இருந்த 4 பேரும் லிப்டோடு சேர்ந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிமாறன், மோகன், சத்தியராஜ், ஜான் ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து நான்கு பேரின் உறவினர்களும், ஊர் மக்களும் அரியலூர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர் மரணம் தொடர்பாக எதுவுமே பேசாததற்குக் கண்டனம் தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications