டீக்கடையில் தீண்டாமை-இரட்டை டம்பளர் பயன்படுத்திய 3 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் டீக்கடையில் இரட்டை டம்ளர் பயன்படுத்திய உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம் பகுதியில் டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் இருப்பதாக எஸ்பிக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் தனி்படையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 டீக்கடைகளில் இரட்டை டம்ளர் பயன்படுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர்கள் சுப்பையாபுரத்தை சேர்ந்த முருகேசன், அரசையா மகன் சரவணன், பிச்சையா மகன் கணேசன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து எஸ்பி ஆஸ்ரா கர்க் நிருபர்களிடம் கூறுகையில், கல்வி மற்றும் பொருளாதரத்தில் முன்னேற்றம் கண்ட இந்த நவீன காலத்திலும் தீண்டாமை கொடுமை நடப்பது கண்டிக்கத்தக்கது. மாவட்டத்தில் இதுபோன்று யாரேனும் தீண்டாமை செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா என கண்காணிக்கவும், சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தீண்டாமை கொடுமைகள் நடந்தால் அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications