பாமகவில் இனி இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு: ராமதாஸ்
திருக்கழுக்குன்றம்: பாமகவில் இனி இளைஞர்களுக்கு தான் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திருக்கழுக்குன்றத்தில் நடந்த திருப்போரூர் தொகுதி பா.ம.கவினர் பயிற்சி முகாமில் பேசிய அக் கட்சியின் ராமதாஸ்,
மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல், அவர்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். அனைவரும் பிளஸ் 2 வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அதற்குமேல் படிப்பவர்களுக்கும் அரசு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசே வேலை வழங்க வேண்டும்.
படிக்க வைக்காத பெற்றோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பல நல்ல திட்டங்கள் பாமகவிடம் உள்ளன. இதை செயல்படுத்த பாமக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இப்போது கூட்டணி வேண்டாம் என்கிறீர்கள். இது எனக்கு தெம்பை தருகிறது.
கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி நம்மை மற்றவர்கள் இதுவரை ஏமாற்றினர். இனி நமக்கு பலவீனம் ஏற்படாது. நாம் வெற்றி பெறத்தான் நமது எம்எல்ஏக்கள் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர்.
கட்சியிலும், இளைஞர்களுக்குதான் இனி வாய்ப்பு. ஒவ்வொரு ஊர் கிளையிலும் 30 வயதிற்குள் உள்ள வாலிபர்தான் கிளைச் செயலாளர். வயதானவர்கள் கிளைத் தலைவராக மட்டுமே இருக்க வேண்டும்.
அதேபோல், பொருளாளர் பதவியில் இளம்பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், பாமக கோட்டையாக மாற வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் செங்கல்பட்டு எம்எல்ஏ ஆறுமுகம் போட்டியிடுவார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications