தூத்துக்குடி விசைப் படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் சங்கம் 2 ஆக உடைந்தது. கடந்த 9 நாட்களாக நடந்து வந்த விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தங்களின் பங்கு தொகையை 35 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனையறிந்த ஆர்டிஓ குருதேவி தலைமையில் விசைப்படகு மீனவர்கள்-விசைப்படகு உரிமையாளர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் சங்கம் 2 ஆக உடைந்தது. முத்துநகர் விசைப்படகு டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் பிரான்சிஸ் என்பவர் தலைமையில் துவக்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தின் முதல் ஆலோசனை கூட்டம் சின்னகோவில் வாளகத்தில் நடைபெற்றது. இதில் வரும் 23ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்களில் ஒரு பகுதியினர் கடலுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தினர் தெரிவிக்கையில் எங்கள் புதிய சங்கத்தில் 150 விசைப்படகு டிரைவர்கள் உள்ளனர். இவர்களை சார்ந்து தலா 15 முதல் 18 பேர் வரை மீன்பிடிக்க வருகின்றனர். வரும் திங்கள் முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறோம் என்றனர்.
இதனையடுத்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த விசைப்படகு ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications