பெல்காம் பிரச்சனையில் பாரபட்சம்: வீரப்ப மொய்லியை நீக்க பால் தாக்கரே கோரிக்கை
மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையிலான எல்லைப் பிரச்சினையில் பாரபட்சமாக நடந்து வரும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை நீக்க வேண்டும் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வீரப்ப மொய்லி ஒரு கன்னடர். இவரது நெருக்குதலின் கீழ் கோர்ட்கள் செயல்படுகின்றன. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் கீழ்தான் கோர்ட்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில், கர்நாடகத்துடனான மராத்தியர்களின் போராட்டத்திற்கு கோர்ட் மூலம் எப்படி நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும்?.
உடனடியாக மொய்லியை நீக்கி விட்டு நடுநிலையான ஒருவரை சட்ட அமைச்சராக்க வேண்டும். மொய்லி சட்ட அமைச்சராக இருந்தால் மகாராஷ்டிர, கர்நாடக எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. எனவே மொய்லி போயாக வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
கடந்த ஜூன் மாதம் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு (சட்ட அமைச்சகம்) ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்தது. அதில், மராத்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகப் பகுதிகளை (பெல்காம் மாவட்டம்) மகாராஷ்டிராவுடன் சேர்த்து விட முடியாது என்று கூறியிருந்தது. இதைத்தான் தாக்கரே தற்போது கண்டித்துள்ளார்.