ஈழப் போர் நிறுத்தம் குறித்த தகவலை நான் வைகோவுக்கு சொல்லவில்லை-சிபிஎம் எம்.எல்.ஏ மறுப்பு

இலங்கைப் படைகள் சிக்கி சிறைப்படுத்தப்பட்டுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் பல்வேறு தகவல்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈழத்தில் நடந்த நான்காவது போர் உச்சத்தில் இருந்தபோது அதை நிறுத்த நான் கடுமையாக முயற்சித்தேன்.
தமிழகத்தில் உள்ள சிலர் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தி போர் நிறுத்தத்திற்கு உடன்பட வைத்தேன். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தவிருந்தார். இதுதொடர்பான முயற்சிகள் நடைபெற்ற நிலையில், இதன் மூலம் திமுகவுக்குப் பெயர் போய் விடக் கூடுமே என்ற காரணத்தால் இதைத் தடுத்து நிறுத்த முடிவு செய்த வைகோ, பா.நடேசனைத் தொடர்பு கொண்டு நீங்கள் ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்தால் நான் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் உங்களுக்குக் கிடைக்காது என்று கூறித் தடுத்து விட்டார்.
போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சிபிஎம் எம்எல்ஏ மகேந்திரன் மூலமகாகவே வைகோவுக்கு கிடைத்தது என்று கூறியிருந்தார்.
இதை தற்போது மகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், எனக்கு விடுதலைப் புலிகளுடனோ அல்லது அதன் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசனுடோ ஒரு தொடர்பும் கிடையாது. ஒருபோதும் எனக்கு புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்ததில்லை.
இலங்கைத் தமிழர்கள் பெரும் துயரில் இருந்தபோதெல்லாம் அரசியல் தீர்வை பேச்சுவார்த்தைகள் மூலமாக காணுமாறுதான் சிபிஎம் வலியுறுத்தி வந்துள்ளது. தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி தேவை என்றுதான் நாங்கள் கோரி வந்துள்ளோம்.
நானோ அல்லது எனது கட்சியோ ஒருபோதும் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்ததில்லை, எந்தவித ஒப்பந்தமும் கொண்டதில்லை என்று மறுத்துள்ளார் மகேந்திரன்.
பிரபாகரன்-ரணில் போர் நிறுத்த ஒப்பந்த ஆவணங்கள் மாயம்:
இதற்கிடையே 2002ம் ஆண்டு இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமாகிவிட்டன.
இந்த ஆவணங்கள் அமைதிக்கான செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் ஆகிய இடங்களில் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதன் நகல் அரசு தகவல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்தம் தொடர்பான முழுத் தகவல்களையும் வெளியிடப்போவதாக அமைச்சரும், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications