கோடிக்கணக்கில் மோசடி செய்த 19 வயது வாலிபர் கைது: மும்பை மாபியாவுடன் தொடர்பு
திருவனந்தபுரம்: இன்டர்நெட் மூலம் பணத்தை இரட்டித்துத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். தொழில் அதிபர். இவரது மின்னஞ்சலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த மைசாப்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஒரு தகவல் வந்தது.
அதில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் பணம் 2 மாதத்தில் இரட்டிப்பு செய்துத் தரப்படும் என இருந்தது. இதை நம்பி உன்னி கிருஷ்ணன் ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் இரண்டு மாதம் ஆகியும் இரட்டிப்பு தொகை கிடைக்கவில்லை. எனவே, தோப்புபடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கோழிக்கோடு தாமரைச்சேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற வாலிபரை கைது செய்தனர். இந்த மோசடியின் பின்னனியில் மும்பையைச் சேர்ந்த ஒரு மாபியா கும்பல் இருப்பது தெரிய வந்தது. மாபியா கும்பல் தலைவரான இந்தூரைச் சேர்ந்த ஹேமந்த் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இக்கும்பல் கேரளாவில் மட்டும் பல முக்கிய தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications