இந்துக்களுக்கு மாட்டுக் கறி உணவு-பாக். நிவாரண முகாமில் போராட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெள்ள நிவாரண முகாமில், இந்துக்களுக்கு மாட்டுக் கறி உணவு போடப்பட்டதால் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானை உலுக்கிப் போட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள நூற்றுக்கணக்கான சிறுபான்மை இந்துக்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் உள்ள ஒரு நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது. அப்போது இந்துக்களுக்கு மாட்டு இறைச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த இந்துக்கள் பகாரி, வகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 600 பேர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மோகன் பகாரி என்பவர் கூறுகையில், நாங்கள் இந்துக்கள். எங்களது மதத்தில் மாட்டு இறைச்சி சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு மாட்டுக் கறியைக் கொடுத்துள்ளனர் அதிகாரிகள். இதை நாங்கள் எப்படி சாப்பிட முடியும் என்றார்.
மாட்டுக் கறி கொடுத்ததைத் தொடர்ந்து இந்துக்கள் அனைவரும் கூடி தங்களை வேறு முகாமுக்கு மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சிந்து மாகாண சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் விரைந்து வந்து அனைவரையம் சமரசப்படுத்தினார்.