கர்ப்பிணி பெண் போலீஸ் கொசுவர்த்தியை கரைத்துக் குடித்து தற்கொலை முயற்சி
சென்னை: 9 மாத கர்ப்பிணியான பெண் போலீஸ்காரர் கொசுவர்த்தியைக் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). இவர் போலீஸ் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர் ஆயுதபடை காவலராக உள்ளார். இவர்களுக்கு 1 வயதுக் குழந்தை ஒன்று இருக்கிறது.
தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் முத்துலட்சுமி. இவர் தனது சகோதரிக்கு பண உதவி செய்து வந்தார். இதனை முருகன் கண்டித்ததால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி இரவில் கொசுவர்த்தியை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் விஷம் குழந்தையை தாக்கி இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகிறார்கள். அதனால் குழந்தையை காப்பாற்ற போராடினார்கள். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.