நான்தான் இன்னும் காமன்வெல்த் போட்டியின் பாஸ்-கல்மாடி

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு மிகப் பெரிய அளவில் ஊழலில் இறங்கியுள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து தினசரி ஒரு ஊழலாக வெளியாகிய வண்ணம் உள்ளது. பணத்தை தேவையில்லாமல் அள்ளி இறைத்துள்ளனர். அனாவசியமாக செலவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து நாட்டின் பெயரை கல்மாடி அன்ட் கோ காலி செய்து விடும் என்ற அச்சத்தில், மத்திய அரசு இதில் தலையிட்டது. முதலில் தனியாக அமைச்சர்கள் குழுவை ஏற்படுத்தியது. இந்தக் குழுவின் அனுமதியில்லாமல் ஒருங்கிணைப்புக் குழு எதையும் செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் 11 அதிகாரிகளைக் கொண்ட உயர் மட்டக் குழுவும் அமைக்கப்பட்டு கல்மாடியின் அனைத்து அதிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்படியும் தனது 'தாடியில் மண் ஒட்டவில்லை' என்று கூறிக் கொண்டிருக்கிறார் கல்மாடி. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தான் இன்னும் காமன்வெல்த் போட்டியின் பாஸ். நான் பொறுப்பிலிருந்து விலகவில்லை. என்னை ஊழல் புகார்கள் எந்தவகையிலும் நெருக்கவில்லை.
மிகச் சிறந்த முறையில் இந்தப் போட்டியை நடத்த வேண்டிய சவால் எனக்கு உள்ளது. எனவே அதை சிறப்பாக முடிக்கும் வரை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
எனது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனது தலைமையில்தான் ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. தனது பொறுப்புகளை சரியான முறையில் செய்து வருகிறது என்றார் கல்மாடி.












Click it and Unblock the Notifications