22 பாட்டிகளிடம் நகை பறித்த கும்பல் கைது: ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
சென்னை: சாலையில் தனியாக நடந்து செல்லும் பாட்டிகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக தெருவில் நடந்து செல்லும் பாட்டிகளை ஏமாற்றி சிலர் நகைகளை பறித்துக் கொண்டிருந்தனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் டீக்காக உடை அணிந்து பாட்டிகளை அணுகுவார்கள். பின்னர் அவர்களிடம், பாட்டி, இப்பகுதியில் கொள்ளையர்கள் அதிகம் எனவே நகைகளை பத்திரமாக பார்சல் செய்து எடுத்துச் செல்லுங்கள் என்று நல்ல பேராண்டிகள் போல பேசுவார்கள்.
நல்ல புள்ளையா இருக்கே என்று பாட்டிகளும் மனம் இளகுவார்கள். பின்னர் தாங்களே உதவி செய்வதாக கூறி பாட்டிகளிடமிருந்து நகைகளை கழற்றி பார்சல் செய்வது போல நடித்து, பார்சலுக்கு கற்களைப் போட்டுஅதை பாட்டி கையில் கொடுத்து விட்டு நகைகளுடன் எஸ்கேப் ஆகி விடுவார்கள்.
இதே பாணியில் வடபழனி, ஆயிரம் விளக்கு, அசோக் நகர், ஐஸ் அவுஸ், மயிலாப்பூர், தண்டையார் பேட்டை, திருவான்மியூர், ஜாம்பஜார், எம்.ஜி.ஆர். நகர், அண்ணாசாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையடித்து உள்ளனர்.
இவர்களைப் பிடிக்க கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்ததில் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மெகபூப் பாட்ஷா (47) என்பவர் தலைமையில் ஒரு கும்பலே இந்த பாட்டிக் கொள்ளையில் ஈடுபடுவது தெரிய வந்தது.
ராயப்பேட்டையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மூதாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்ற மெகபூப் பாட்ஷா பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகளான பிரபா, செல்வம், ராஜேஷ், சையது ஷகில் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மெகபூப் பாட்ஷா 22 பாட்டிகளிடம் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 142 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இந்த கும்பலிடம் இருந்து நகைகள் வாங்கிய வியாபாரிகள் முனீர், ஜாகீர், மூர்த்தி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைக் கும்பலின் தலைவனான மெகபூப் பாட்ஷாவுக்கு 39 வழக்குகளில் தொடர்புள்ளது. இவர் 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கைக்கும் உடந்தை:
இவரது தங்கை அமீதாபி. இவரும் இந்த கும்பலும் சேர்ந்து தான் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். எனவே தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக சென்னையை கலங்கடித்த இந்த கொள்ளைக் கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.