வேதாந்தா பாக்ஸைட் சுரங்கம்... மத்திய அரசு அனுமதி மறுப்பு!

இன்று பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஒரிஸ்ஸா மாநிலம் நியமகிரி மலைப் பிரதேசத்தில் ஏராளமான பாக்ஸைட் கனிமங்கள் உள்ளன. அலுமினியம் தயாரிக்க முக்கிய மூலப் பொருள் பாக்ஸைட்தான். இதைத் தோண்டியெடுக்க சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியது வேதாந்தா நிறுவனம். ஒரிஸ்ஸா மாநில அரசு இதற்கு முன்னதாக, இந்த திட்டத்தால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியது.
இந் நிலையில் மத்திய வனத்துறை ஆலோசனைக் குழு இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது. மத்திய வனத்துறை அமைச்சகத்தின் என்சி சக்சேனா தலைமையிலான கமிட்டியும் இந்த திட்டத்தை எதிர்த்தது.
காரணம் இந்தப் பகுதியில் இரு முக்கிய பழங்குடி இன மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உறுதியாக இருந்தனர்.
இந் நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் வேதாந்தாவின் பாக்ஸைட் சுரங்கத்துக்கு அனுமதி கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்துக்கு இது மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக பல ஒழுங்குமுறைச் சிக்கல்களை இந்த நிறுவனம் எதிர் கொண்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் கெய்ர்ன் எனர்ஜி பெட்ரோலிய நிறுவனத்தை வாங்க அனில் அகர்வால் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் உள்ள இந்த நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளை வாங்க ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முயன்றார்.
ஆனால், இதை ரூ. 42,000 கோடிக்கு வாங்க அனில் அகர்வால் ஒப்பந்தம் செய்துவிட்டார். ஆனால் அவருக்கு இதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு யோசித்து வருகிறது. இந் நிலையில் பிகார் முதல்வரின் ஆதரவு அனில் அகர்வாலுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கெய்ர்ன் நிறுவனத்தை வாங்க அனில் அகர்வாலை அனுமகிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளதாகக் தெரிகிறது.
இந்த நிறுவனத்தை வாங்கினால் இந்தியாவின் மாபெரும் பணக்காரர் என்ற நிலைக்கு அனில் அகர்வால் உயர்வார். இதுவரை இந்த இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியை அவர் பின் தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications