நெல்லையில் இரவு பஸ் சேவை மேலும் விஸ்தரிப்பு-மக்கள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தனது இரவு நேரப் பேருந்து சேவையை விஸ்தரித்துள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக பொது மேலாளர் முருகன் தெரிவித்தார்.
இதன்படி, டவுன், சமாதானபுரத்திற்கும் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் சந்திப்பு-புதிய பேருந்து நிலையத்திற்கு மட்டும் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் காலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. ஆனால் சமாதானபுரம், டவுன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் பேருந்து வசதி இன்றி பயணிகள் சிரமப்பட்டனர். இதனால் மக்கள் ஆட்டோ அல்லது காரில் பயணித்தனர்.
இரவில் ஆட்டோ கட்டணத்தை கேட்டாலே மயக்கம் வந்துவிடும். அவர்கள் கேட்கும் கூடுதல் கட்டணத்தைக் கொடுத்து பயணித்தாலும் கூட, மக்கள் ஒருவித பயத்துடனேயே பயணம் செய்தனர்.
இந்த அவலத்தைப் போக்க இரவு நேரப் பேருந்துகளை அதிகரிக்கவும், விஸ்தரிக்கவும் வேண்டும் என்று நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்குக் கோரிக்கைகள் பறந்தன.
இதையடுத்து நெல்லை நகரப் பகுதிகளில் இரவு நேரப் பேருந்து சேவையை அதிகரிக்கவும், பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு, பாளை பஸ் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கும், டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு, சமாதானபுரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாளை பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கும் இரவு நேரப் பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படுகிறது.