விஜயகாந்த் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதி-வீராசாமி
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுகின்ற அறிக்கைகள் பற்றியோ, பேட்டிகள் பற்றியோ பொதுவாகக் கழக தலைவர் கருணாநிதி எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.
ஆனால் அவர் மட்டும் தொடர்ந்து திமுகவைப் பற்றியும், தலைவர் கருணாநிதி பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். அந்த வரிசையில்தான் அவர் விடுத்த அறிக்கையில், தேவையில்லாமல் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்- அவர்களோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருந்தார்.
திமுகவைப் பொறுத்த வரையில் தேமுதிகவுடன் கூட்டணி என்று நாங்கள் என்றைக்கும் சொன்னதில்லை. இப்படியிருக்கிறபோது விஜயகாந்த்தான் முதலில் வெளியிட்ட அறிக்கையில் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று வம்பை விலைக்கு வாங்கினார்.
அவர் அவ்வாறு எழுதியதால்தான் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அதற்கு பதில் சொல்லி விஜயகாந்தின் வரலாறு என்ன என்பதை விளக்கி, அப்படிப்பட்டவர் திமுகவைப் பற்றி சொல்லாமா என்று கேட்டிருந்தார்.
உடனே விஜயகாந்த் இன்று வரிந்து கட்டிக்கொண்டு பெரியதோர் அறிக்கையினை முதல்வர் கருணாநிதியைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வெளியிட்டிருக்கிறார்.
முதல்வர் நாகரீகத்தோடு விஜயகாந்தைப் பற்றி எழுதும்போது, விஜயகாந்த் தேவையில்லாமல் முதல்வருடைய குடும்பத்தினரைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.
மேலும் முதல்வர் தனது வீட்டையே மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்திருப்பதைப் பற்றியும், அவர் தனது வாழ் நாளுக்குப் பிறகு அதனைத் தரவிருப்பதைப் பற்றியும் விஜயகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
முதல்வர் இப்போது இருக்கும் வீட்டை இப்போதே தர்மம் செய்துவிட்டால் பிறகு அவர் எங்கே இருப்பார் என்பது கூட அந்த நடிகருக்குத் தெரியவில்லையா?.
முதற்கட்டமாக விஜயகாந்த் தான் வம்பை விலைக்கு வாங்கி, அவருக்கு கலைஞர் பதில் அளித்தவுடன் அதனைத் தாங்கிக் கொண்டு முறையாக பதிலளிக்க முடியாமல், தனிப்பட்ட முறையிலே விமர்சனம் செய்திருப்பதிலிருந்து அவர் எப்படிப்பட்ட அரை வேக்காட்டு அரசியல்வாதி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.