தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அரசு அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தீவிரவாத அமைப்பால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் அணைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்டத்திலும் எஸ்.பி.க்கள் தலைமையில் முக்கிய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள மி்ன் நிலைய அதிகாரிகள், அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் முல்லை பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைக்கும் தற்போது வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த வாரம் தான் பண்டிகை காலத்தையொட்டி தீவிரவாதிகள் இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.