சோமாலிய ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்: எம்.பி.க்கள் உள்பட 32 பேர் பலி
மொகாதிஷு: சோமாலிய நாட்டின் தலைநகரான மொகாதிஷுவில உள்ள ஹோட்டல் ஒன்றில் புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 32 பேர் பலியானார்கள்.
சோமாலியாவில் மேலை நாடுகளின் ஆதரவுடன் கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. அல் கொய்தா'விற்கு ஆதரவளிக்கும் ஷெகாப் என்ற தீவிரவாத அமைப்பு சோமாலியாவில் அடிக்கடி அதிரடி தாக்குதகளை நடத்தி வருகின்றது.
சோமாலிய நாட்டின் தலைநகர் மொகாதிஷுவில் பிரபலமான மோனா' ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்குள் ஷிகாப் இயக்கத்தைச் சேர்ந்த 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ராணுவ உடையில் திடீரென உள்ளே நுழைந்தனர். அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் அதிக அளவில் தங்குவார்கள்.
தீவிரவாதிகள் இருவரும் வெடிகுண்டுகளை தங்கள் ஆடைகளில் பொருத்தியிருந்தனர். அவர்கள் ஹோட்டலில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்து ஹோட்டலை சுற்றி வளைத்தனர். இதற்கிடையே அந்த தீவிரவாதிகள் தங்கள் ஆடைகளில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி இறந்தனர்.
இந்த தாக்குதலில் ஹோட்டலில் தங்கி இருந்த 32 பேர் பலியானார்கள். அவர்களில் 6 முதல் 15 பேர் வரை சோமாலிய பாராளுமன்ற உறுப்பினர்களாக (எம்.பி.க்கள்) இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலரும் பலியாகி உள்ளனர். இறந்தவர்களில் சுமார் 20 பேர் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த அப்பாவி பொது மக்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications