சிபிஎம்மிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி திமுகவில் இணைந்தார்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக அரசுக்குப் பாராட்டி விழா எடுத்தார் கோவிந்தசாமி. இதையடுத்து அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியை விட்டு தூக்கியது. இதைத் தொடர்ந்து தான் தொடர்ந்து மக்கள் சேவையாற்றுவேன் என்று கூறினார் கோவிந்தசாமி.
சமீபத்தில் அவர் நான் விரைவில் திமுகவில் இணைவேன் என்று அறிவித்தார். 20 ஆயிரம் பேருடன் சென்னை சென்று திமுகவில் இணையப் போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இன்று சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொ்ண்டனர்.
10,000 பேர்தான் வந்தனர்:
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், 20 ஆயிரம் பேர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று தி.மு.க.வில் இணைவதாக அறிவித்தனர். மழை காரணமாக அவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கக் கூடிய கோவிந்தசாமி திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்று பாராட்டினார்.