10 மீனவர்கள் படகுகளுடன் இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைப்பு: அரசு உத்தரவு
தூத்துக்குடி: எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடித்துப் பிடிபட்ட 10 இலங்கை மீனவர்களும் நேற்று அவர்களது படகுகளுடன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய கடலோரக் காவல்படையினர் கடந்த ஜூன் 16-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து தென்கிழக்கே 62 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் சியம்புத்தா என்ற படகில் மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.
நீ்ர்கொழும்பைச் சேர்ந்த இம்மானுவேல் மாத்யூஸ், சிட்காம் பெர்னான்டோ, சுனில், லலித் ரோகன் மற்றும் ஜான் கில்பர்ட் ஆகிய 5 பேரும் தெர்மல் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் கடந்த மாதம் 25-ம் தேதி இலங்கை பெருநல்லா பகுதியில் இருந்து பாம்பி என்ற படகில் புறப்பட்ட 5 மீனவர்களின் படகு பழுதானதால் அரபிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்க வேண்டும் என இலங்கை தூதரகம் மூலம் தகவல் பெற்ற கேரளக் கடலோர காவல்படையினர் கன்னியாகுமரியில் இருந்து தென்மேற்கே 88 மைல் கடல் தொலைவில் உயிருக்கு போராடிய 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இவர்கள் 10 பேரும் தங்களின் படகுகளுடன் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேற்று மாலை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள் இந்திய கடலோரக் காவல்படை கப்பலான அகல்யாபாய் மூலம் இன்று பகல் 10 மணி அளவில் சர்வதேச கடல் எல்லையில் காத்திருக்கும் இலங்கை கப்பல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.